

சென்னை: 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் கால் இறுதி சுற்று இன்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் கடைசி கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்து இருந்தது. இந்த 3 ஆட்டங்களிலும் இந்திய அணி 29 கோல்களை அடித்து அசத்தியது.
அதேவேளையில் ஒரு கோலை கூட எதிரணியிடம் இருந்து வாங்கவில்லை. எனினும் இந்திய அணிக்கு உண்மையான சவால் இன்று பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில்தான் காத்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை வசப்படுத்தாவிட்டால் சொந்த மண்ணில் 9 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறாத நிலை உருவாகும்.
லீக் சுற்றில் இந்திய அணி அடித்த 28 கோல்களில் 18 கோல்கள் பீல்டு கோலாக அமைந்திருந்தது. 9 கோல்களை பெனால்டி கார்னர் வாய்ப்புகளிலும், 2 கோல்களை பெனால்டி ஸ்டிரோக் வாயிலாகவும் இந்திய அணி அடித்திருந்தது. இதே பார்மை தொடர்வதில் இந்திய அணி முனைப்பு காட்டக்கூடும்.
முதல் இரு போட்டிகளிலும் கோல் மழை பொழிந்த இந்திய அணியால் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக 5 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் டிபன்ஸை சுவிட்சர்லாந்து அணி சோதனைக்கு உட்படுத்தியது. எனினும் கோல் கீப்பர்களான பிரின்ஸ் தீப் சிங், பிக்ரம்ஜித் சிங் ஆகியோர் அற்புதமாக செயல்பட்டு சுவிட்சர்லாந்து அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தகர்த்திருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க இந்திய அணி பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் கேப்டன் ரோஹித், அன்மோல் ஏக்கா ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்படும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கும்.
லீக் சுற்றில் ஸ்டிரைக்கர்களான தில்ராஜ் சிங் 6 கோல்களும், மன்மீத் சிங் 5 கோல்களும், அர்ஷ்தீப் சிங் 4 கோல்களும், அஜீத் யாதவ் 2 கோல்களும் அடித்து அசத்தியிருந்தனர். ரோசன் குஜூர், அட்ரோய் ஏக்கா, அங்கித் பால், இங்கலெம்பா லுவாங் தவுனோஜாம் ஆகியோர் நடுகளத்தில் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தினர். ஆனால் வலுவான அணிகளுக்கு எதிராக இவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
லீக் சுற்றில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றிருந்த பெல்ஜியம் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடம் பிடித்திருந்தது. 2-வது இடம் பிடித்த சிறந்த அணிகளுள் ஒன்றாக தேர்வாகியே பெல்ஜியம் கால் இறுதி சுற்றில் நுழைந்தது. நடப்பு தொடரில் பெல்ஜியம் அதிக கோல்கள் அடித்த அணிகளின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 22 கோல்கள் அடித்துள்ளது. இதில் 11 கோல்கள் பீல்டு கோல்களாகும். 11 கோல்கள் பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் அடிக்கப்பட்டிருந்தது.
இன்று நடைபெறும் மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின் -நியூஸிலாந்து (பிற்பகல் 12.30மணி), பிரான்ஸ் - ஜெர்மனி (பிற்பகல் 3 மணி), நெதர்லாந்து - அர்ஜெண்டினா (மாலை 5.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய வீரர்களுக்கு ஸ்ரீஜேஷ் எச்சரிக்கை: இந்திய அணியின் பயிற்சியாளரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கூறும்போது, “நிச்சயமாக நாங்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன. கால் இறுதி சுற்றில் இருந்துதான் உண்மையான போட்டி தொடங்குகிறது. எத்தனை முறை வட்டத்துக்குள் நுழைகிறோமோ அவற்றை பெனால்டி கார்னர்களாகவோ அல்லது கோல்களாகவோ அல்லது ஷாட்களாகவோ மாற்ற வேண்டும்.
மேலும் நமது டிஃபன்ஸையும் இறுக்க வேண்டும், சில தேவையற்ற பெனால்டி கார்னர்களை விட்டுக்கொடுக் கிறோம். தற்காப்பு கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துவதும், வீரர்கள் முன்னோக்கி சென்று தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வதும் முக்கியம். ஜூனியர் உலகக் கோப்பை எளிதான தளம் அல்ல, இங்கு விளையாடும் எந்த அணிகளும் எளிதான பாதையை வழங்காது. எந்தத் தவறு செய்தாலும் அதற்கான விலையை கொடுக்க நேரிடும்” என்றார்.