

படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டிகள் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. சென்னை எழும்பூரிலுள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற முதல் அரை இறுதியில் ஸ்பெயின், அர்ஜெண்டினா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே, ஸ்பெயின் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் மரியோ மேனா முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் இந்த கோலை மரியோ மேனா அடித்தார்.
இந்நிலையில் ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா இதற்கு பதிலடி தந்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்திய அர்ஜெண்டினா வீரர் ஜுவான் பெர்னாண்டஸ் கோலடித்து 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார்.
ஆட்டத்தின் 56-வது நிமிடத்தின்போது ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் செர்ராஹிமா ஃபீல்டி கோலடித்து அணிக்கு 2-1 என்ற கணக்கில் முன்னிலையைப் பெற்றுத் தந்தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியா தோல்வி: 2-வது அரை இறுதியில் ஜெர்மனி 5-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஜெர்மனி அணி தரப்பில் லுகாஸ் கோசல் 2 கோல்களும், ஹஸ்பாக் பென், ஜோனஸ் வான் ஜெர்சம், டைட்டஸ் வெக்ஸ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் அன்மோல் எக்கா ஒரு கோலடித்தார்.