ஆர்சிபி அசத்தல் பவுலிங்: 155 ரன்களில் சுருண்டது குஜராத் டைட்டன்ஸ் | IPL Final

ஆர்சிபி அசத்தல் பவுலிங்: 155 ரன்களில் சுருண்டது குஜராத் டைட்டன்ஸ் | IPL Final
Updated on
1 min read

அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்யக் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களில் இருந்தே கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி, குஜராத்தின் முன்னணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களிலும், சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மிடில் ஆர்டரில் வந்த ஜோஸ் பட்லர் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, குஜராத் அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணியை மீட்கப் போராடினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் குவித்து அணிக்கு ஓரளவு ஸ்கோரை உறுதி செய்தார். இறுதி ஓவர்களில் வந்த ரஷித் கான் (7), ஜேசன் ஹோல்டர் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு அணி தரப்பில் மிக அற்புதமாகப் பந்துவீசிய இளம் வீரர் ராசிக் சலாம் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்குப் பக்கபலமாக இருந்த அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். குஜராத் அணி நிர்ணயித்துள்ள இந்த 156 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆர்சிபி அணி வெற்றிகரமாகத் துரத்தி மீண்டும் சாம்பியன் மகுடத்தை சூடுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆர்சிபி அசத்தல் பவுலிங்: 155 ரன்களில் சுருண்டது குஜராத் டைட்டன்ஸ் | IPL Final
“விஜய் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” - பிரேமலதா பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in