

டாக்கா: வங்கதேச வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை ஐபிஎல் அணியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கவேண்டும் என்று பாஜக தலைவர்கள், சிவசேனா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். முஸ்டாபிஸுரை கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(கேகேஆர்) அணி நிர்வாகம் எடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) உத்தரவின் பேரில் முஸ்டாபிஸுரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது.
இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வங்கதேச அணி வராது என்றும் தெரிவித்தது. மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறும் ஐசிசிக்கு அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரம் வலுத்து வரும் நிலையில், வங்கதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு நேற்று தடை விதித்துள்ளது. மேலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவும் காலவரையற்ற தடை விதித்து வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
வங்கதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: ஐபிஎல் கிரிக்கெட் அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்டாபிஸுரை நீக்கியது சரியல்ல. அவரை நீக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவு பிறப்பித்திருப்பது சரியான விஷயமல்ல.
பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு பின்னால் எந்தவிதமான நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், இத்தகைய முடிவு வங்கதேச மக்களைத் துயரத்துக்கும், அதிர்ச்சிக்கும், கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தல்களின்படி கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவு உரிய அதிகாரியின் ஒப்புதலுடன், பொது நலன் கருதியும் வெளியிடப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள், அதுதொடர்பான விளம்பரங்கள், ஐபிஎல் கேம்ஸ், பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் என அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.