

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். இதன் பின்னர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, விதான் சவுதாவில் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஆலோசனை நடத்தினார். இதில் விஜய் ஹசாரே டிராபி போட்டியை பார்வையாளர்களை அனுமதிக்காமல் மைதானத்தில் நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறும்போது, ”விஜய் ஹசாரே போட்டி நாளை (24-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டியை காண பார்வையாளர்களை அனுமதிக்காமல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெருநகர பெங்களூரு ஆணையத்தின் கமிஷனர் தலைமையிலான இந்தக் குழுவில் காவல் ஆணையர், பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளனர், அவர்கள் மைதானத்துக்குச் சென்று ஆய்வு செய்து கருத்து அறிக்கை வழங்குவார்கள். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
பெங்களூரு நகர காவல் ஆணையர் ஏற்கெனவே கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 17 அம்சங்கள் அடங்கிய பரிந்துரைகளை அனுப்பி வைத்துள்ளார். இவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு இந்த பரிந்துரைகள் நிறைவேற்றப் பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யும் என அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.