

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவரும், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49.
இந்தியாவின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர் மற்றும் சர்வதேச அளவிலான பயிற்சியாளர்களில் முதன்மையானர் ஜஸ்பால் ராணா. இவர், இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டு போட்டியில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
காமன்வெல்த் விளையாட்டில் 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். வீரராக மட்டுமின்றி பயிற்சியாளாராக, ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாகர், சவுரரப் சவுத்ரி, அனிஷ் பன்வாலா போன்ற திறமையான வீரர்களையும் உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், ஜஸ்பால் ராணா, ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பினார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் உடனடியாக டெல்லி உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது இதயத்தில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள் ஸ்டென்ட் பொருத்தினர். இந்நிலையில் திடீரென நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது.
அவரது மரணம் இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுத்துறையை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் தலைமைப் பயிற்சியாளரான இவருக்கு 1994-ம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 1997-ம் ஆண்டில் பத்ம விருதும், 2020-ம் ஆண்டில் துரோணாச்சார்யா விருதும் வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்தது.