

திருவனந்தபுரம்: இலங்கை அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் அரை சதம் விளாசினார்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி நேற்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹர்மன் பீரித் கவுர் 43 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 68 ரன்கள் விளாசினார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இது அவரது 16-வது அரை சதமாக அமைந்தது. இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் விளாசிய இந்திய வீராங்கனைகள் வரிசையில் 3-வது இடத்தில் ஹர்மன்பிரீத் உள்ளார்.