

தீப்தி சர்மா
துபாய்: ஐசிசியின் டி 20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
மகளிருக்கான டி 20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா முதன்முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் தீப்தி சர்மா 4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார்.
இதன் மூலம் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான அனாபெல் சுதர்லேண்டை பின்னுக்குத்தள்ளி 737 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் தீப்தி சர்மா. இந்திய அணியின் வேகப்ந்து வீச்சாளரான அருந்ததி ரெட்டி 5 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தையும், சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீசரணி 19 இடங்கள் முன்னேறி 69-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 பந்துகளில், 69 ரன்கள் விளாசியிருந்தார். துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் தொடர்கிறார். ஷபாலி வர்மா ஓர் இடத்தை இழந்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.