

ஹோபர்ட்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆடவருக்கான ஹாக்கி புரோ லீக் தொடரின் ஒரு பகுதி தற்போது ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்திய அணி தரப்பில் அமித் ரோஹிதாஸ் (15-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (43-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோயல் ரின்தலா 47 மற்றும் 56-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷுட் அவுட் நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் ஹாக்கி புரோ லீக்கில் இந்திய அணி தொடர்ச்சியாக அடையும் 5-வது தோல்வி இதுவாகும்.