

சென்னை: 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது.
24 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் லீக் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ‘பி’ பிரிவில் இந்தியா, ‘சி’ பிரிவில் அர்ஜெண்டினா, ‘டி’ பிரிவில் ஸ்பெயின், ‘இ’ பிரிவில் நெதர்லாந்து, ‘எஃப்’ பிரிவில் பிரான்ஸ் ஆகிய அணிகள் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்த 6 அணிகளுடன் 2-வது இடம் பிடித்த 2 சிறந்த அணிகளாக நியூஸிலாந்து, பெல்ஜியம் ஆகியவையும் கால் இறுத சுற்றில் கால்பதித்துள்ளன. கால் இறுதி ஆட்டங்கள் நாளை (5-ம் தேதி) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன. இதில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி பெல்ஜியத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
அன்றைய தினம் நடைபெறும் மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின் - நியூஸிலாந்து அணிகளும் (பிற்பகல் 12.30 மணி), ஜெர்மனி - பிரான்ஸ் (பிற்பகல் 3 மணி) அணிகளும், அர்ஜெண்டினா - நெதர்லாந்து அணிகளும் (மாலை 5.30 மணி) மோதுகின்றன.
இன்று (4-ம் தேதி) 9 முதல் 16 மற்றும் 17 முதல் 24-வது இடங்களுக்கான ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மதுரையில் நடைபெறும் ஆட்டங்களில் நமீபியா - ஆஸ்திரியா, வங்கதேசம் - ஓமன், கொரியா - எகிப்து, சீனா - கனடா ஆகிய அணிகள் மோதுகின்றன.
சென்னையில் நடைபெறும் ஆட்டங்களில் இங்கிலாந்து - சிலி, தென் ஆப்பிரிக்கா - மலேசியா, சுவிட்சர்லாந்து - அயர்லாந்து, ஆஸ்திரேலியா - ஜப்பான் ஆகிய அணிகள் மோதுகின்றன. மதுரையில் காலை 9 மணிக்கும், சென்னையில் பிற்பகல் 12.30 மணிக்கும் போட்டிகள் தொடங்குகின்றன.