இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா: 2-வது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்
ராய்ப்பூர்: இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. ரியான் ரிக்கெல்டன், பிரனேலன் சுப்ராயன், ஒட்னீல் பார்ட்மேன் ஆகியோர் நீக்கப்பட்டு கேப்டன் தெம்பா பவுமா, கேசவ் மஹாராஜ், லுங்கி நிகிடி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 8 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் நந்த்ரே பர்கர் பந்தில் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ யான்சன் பந்தை விளாச முயன்ற போது ஸ்கொயர் லெக் திசையில் கார்பின் போஷிடம் கேட்ச் ஆனது.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கத்தில் நிதானமாகவும் அதன் பின்னர் அதிரடியாகவும் விளையாடி பார்ட்னஷிப்பை கட்டமைத்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இந்த ஜோடி ஒரு ரன்னை 2 ரன்களாகவும் தேவையான நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர்களும் விளாசி ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை விளாசினார். அவர், மார்கோ யான்சன், கேசவ் மஹாராஜ் ஆகியோரது பந்துகளில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
மறுபுறம் சீராக ரன்கள் சேர்த்த விராட் கோலி 90 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் தனது 53-வது சதத்தை விளாசினார். மட்டையை சுழற்றிய அவர், லுங்கி நிகிடி மற்றும் மார்கோ யான்சன் பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்டிருந்தார். 156 பந்துகளில், 195 ரன்கள் குவித்த இந்த ஜோடியை மார்கோ யான்சன் பிரித்தார். ருதுராஜ் கெய்க்வாட் 83 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்த நிலையில் டீப் ஃபைன் லெக் திசையில் டோனி டி ஸோர்ஸியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 35.4 ஓவர்களில் 257 ரன்களாக இருந்தது. அடுத்த சில ஓவர்களில் விராட் கோலி ஆட்டமிழந்தார். 93 பந்துகளை சந்தித்த விராட் கோலி 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசையில் எய்டன் மார்க்ரமிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 8 பந்துகளில் ஒரு ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
இறுதிக்கட்ட ஓவர்களில் தனது 20-வது அரை சதத்தை கடந்த கேப்டன் கே.எல்.ராகுல் 43 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 27 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 390 ரன்களுக்கு மேல் எளிதாக சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 74 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
359 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 8 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தெம்பா பவுமா 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில், ஹர்ஷித் ராணாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். தனது 4-வது சதத்தை கடந்த எய்டன் மார்க்ரம் 98 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்தை லாங் ஆன் திசையில் அடித்த போது ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் ஆனது.
ருதுராஜ் கெய்க்வாட்
இதன் பின்னர் களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கேவுடன் இணைந்து இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தார். இந்த ஜோடியின் அதிரடியால் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 282 ரன்கள் குவித்தது. தனது முதல் அரைசதத்தை கடந்த டெவால் பிரேவிஸ் 34 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் லாங் ஆன் திசையில் நின்ற ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தியது. டெவால்ட் பிரேவிஸ் ஆட்டமிழந்த போது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 57 பந்துகளில் 70 ரன்கள் தேவையாக இருந்தன. இதையடுத்து டோனி டி ஸோர்ஸி களமிறங்க, மேத்யூ ப்ரீட்ஸ்கே விரைவாக ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். சீராக ரன்கள் குவித்து வந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே 64 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 43.5 ஓவர்களில் 317 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய மார்கோ யான்சன் 2 ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை நெருங்கிய நிலையில் டோனி டி ஸோர்ஸி 17 ரன்கள் எடுத்த நிலையில் தசைபிடிப்பு காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இதன் பின்னர் கார்பின் போஷ் 15 பந்துகளில், 29 ரன்களும் கேசவ் மஹாராஜ் 14 பந்துகளில், 10 ரன்களும் சேர்க்க தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
2-வது அதிகபட்சம்: ராய்ப்பூர் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு எதிராக இந்தியா குவிக்கும் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் 2010-ல் குவாலியர் போட்டியில் இந்திய அணி 401 ரன்கள் குவித்திருந்தது.
`வேகம் காட்டிய ருது': தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் 50 ரன்களை 52 பந்துகளில் எடுத்திருந்தார். ஆனால் அடுத்த 50 ரன்களை 25 பந்துகளில் விளாசி சதம் எடுத்து அசத்தினார்.
20-வது முறையாக டாஸ் போச்சு: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் டாஸில் தோல்வி அடைந்தார். 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 20-வது முறையாக டாஸை இழந்துள்ளது.
34 இடங்களில் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திரமான விராட் கோலி சதம் அடித்தார். வெவ்வெறு மைதானங்களில் அவர், அடிக்கும் 34-வது சதம் இதுவாகும். இந்த வகையிலான சாதனையில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரை சமன் செய்துள்ளார்.
