

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். நீண்ட நாட்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த அபிஷேக் சர்மா, 30 பந்துகளில் 55 ரன்கள் விளாசி தனது முதல் உலகக் கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார்.
சஞ்சு சாம்சன் 24 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 13 பந்துகளில் 33 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மாவும் 44 ரன்களுடன் தன் பங்குக்க் அதிரடி காட்ட, இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது.
257 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியின் இளம் வீரர் பிரையன் பென்னட் 97 ரன்கள் குவித்து அசத்தினார். ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா 31 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அந்த அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனது.
இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் சார்பாக அதிக விக்கெட்டுகளை (35 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் ஜஸ்பிரித் பும்ரா 33 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். அக்ஷர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்திதலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் வலுவான நிலையை எட்டியுள்ளது.