

ஜெய்ப்பூர்: கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்ட்ர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் உலக சாம்பியனும், சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் நேற்று விஸ்வநாதன் ஆனந்த் கலந்துகொண்டு தனது புத்தகத்தை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் வரும் மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா, பேபியானோ கருணா, ஹிகாரு நகமுரா, அனிஷ் கிரி, வெய் யீ, ஜவோகிர் சிந்தரோவ், ஆந்த்ரே எஸ்பின்கோ, மாத்தியஸ் புளூபாம் ஆகியோர் விளையாடவுள்ளனர். இதில் சாம்பியன் பட்டம் வெல்பவர், உலக சாம்பியன் டி.குகேஷுடன், உலக சாம்பியன் பட்டத்துக்காக மோதுவர்.
இந்தப் போட்டியில் யார் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாலும், அவர்கள் நிச்சயம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவர். மேலும், உலக செஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனுக்கு சவால் அளிப்பார்கள். இந்தப் போட்டிக்கு ஆர். பிரக்ஞானந்தா தகுதி பெற்றால், அது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ், பிரக்ஞானந்தா இருவருக்கும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், இந்த ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் மோதும்போது அது ஒரு சாதாரணமான போட்டியாக இருக்காது. அது சென்னையில் கூட நடைபெறலாம். இருவரும் ஒரே பள்ளியில் படித்து ஒரே மாதிரியான சூழலில் இருக்கின்றனர். மேலும், அவர்களைச் சுற்றியுள்ள அனைவரின் எதிர்வினையும் உணர்ச்சிப்பூர்வமாகவும், தீவிரமாகவும் இருக்கும்.
அதே நேரத்தில் குகேஷுடன் உலக போட்டியில் மோதும் வீரர் வேறு நாட்டவராக இருந்தால், அது அத்தனை உணர்ச்சிகரமாக இருக்காது. நீண்ட நாட்கள் கழித்து கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் பிளிட்ஸ் செஸ் போட்டியில் விளையாடினேன். போட்டியிடுவது, சவாலான ஆட்டங்களில் பங்கேற்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனக்குத் தேவையான போட்டிகளைத் தேர்வு செய்து விளையாடுவேன். தற்போதுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளில் ஆர்.வைஷாலி, அர்ஜுன் எரிகைசி, குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோரின் விளையாட்டு மிகவும் பிடிக்கும். அவர்கள் என்னை விட வயது குறைந்தவர்கள் என்பது உண்மை. அவர்களுடைய பெற்றோரை விட எனக்கு வயது அதிகமாக இருக்கலாம். நான் அவர்களுடன் உலக சாம்பியன் என்ற ரீதியில் பேசவில்லை. நானும் செஸ் வீரன். அவர்களும் செஸ் விளையாட்டு வீரர்கள். நானும், அவர்களும் சமம்தான். இதில் சீனியர், ஜூனியர் என்ற வேறுபாட்டை நான் பார்ப்பதில்லை.
செஸ் விளையாட்டின்போது காய்களை நகர்த்துவதில் நல்ல நகர்வைத் தெரிவித்தால் அது ஒரு நல்ல நகர்வுதான். அங்கே சீனியர், ஜூனியர் கிடையாது. விளையாட்டுதான் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி, இடம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.