

சென்னை: ஹாக்கி இந்தியா லீக் ஆடவர் போட்டியில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் தூபான்ஸ் அணியை வீழ்த்தியது.
ஹாக்கி இந்தியா லீக் ஆடவர் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியும், ஹைதராபாத் தூபான்ஸ் அணியும் மோதின.
இதில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியினர் 4 கோல்களும், ஹைதராபாத் அணியினர் 2 கோல்களும் அடித்தனர்.
இதைத் தொடர்ந்து ஷூட்-அவுட் அடிப்படையில் 4-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி கண்டது.
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்காக சோபர்ஸ்பி தாமஸ், உத்தம் சிங், கார்த்தி செல்வம் ஆகியோரும், ஹைதராபாத் அணிக்காக அமன்தீப் லக்ரா 2 கோல்களும், ஆர்த்தர் டி ஸ்லூவர் ஒரு கோலும் அடித்தனர். ஷூட்-அவுட்டில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்காக நேதன் எப்ரம்ஸ், பிளேக் கோவர்ஸ், உத்தம் சிங், முகமது ரஹீல் ஆகியோர் கோலடித்தனர். ஹைதராபாத் அணிக்காக ஜக்காரி வாலஸ் 2 கோல்களை அடித்தார்.