

குவாஹாட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான குவாஹாட்டி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மோசமான தோல்வியாக இது அமைந்தது.
அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பயை வென்றது. கவுதம் கம்பீர் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 5-ல் தோல்வி கண்டுள்ளது.
இந்நிலையில் குவாஹாட்டி டெஸ்ட் போட்டிக்கு பின்னர் கவுதம் கம்பீர் கூறியதாவது: பயிற்சியாளராக எனது எதிர்காலத்தை பிசிசிஐ-தான் முடிவு செய்ய வேண்டும். நான் பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் நடைபெற்ற முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய கிரிக்கெட்தான் முக்கியம். நான், முக்கியம் இல்லை என்று கூறியிருந்தேன். இப்போதும் நான் இதையே கூறுவேன். மக்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இதே இளம் அணியை கொண்டுதான் சிறந்த முடிவுகளை பெற்றுக்கொடுத்தேன்.
சாம்பியன்ஸ் டிராபியையும், ஆசியக் கோப்பையையும் வென்றுள்ளோம். குற்றம் சுமத்துதல் எல்லோர் மீதும் இருக்கிறது. அது என்னில் இருந்து தொடங்கட்டும். நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். 95 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் இருந்து 122 ரன்களுக்குள் 7 விக்கெட்கள் சரிவு என்பதை ஏற்க முடியவில்லை. இதற்காக ஒரு வீரரையோ அல்லது ஒரு ஷாட்டையோ குறை கூற முடியாது. பழி எல்லோரையுமே சேரும். தனிப்பட்ட வீரரை ஒருபோதும் நான் குற்றம் கூறியது கிடையாது.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சவால்களை கொண்டது. வேறுபட்ட திறமைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு வலுவான மனநிலையும் தேவை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெற திறமையான, துணிச்சலான வீரர்கள் தேவையில்லை. குறைவான திறன்கள் கொண்ட, ஆட்டத்தின் எந்த சூழ்நிலையிலும் வலுவான மனநிலையுடன் விளையாடக்கூடிய வீரர்களே தேவையாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.