

ஹூஸ்டன்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், புகழ்பெற்ற வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றுமொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் கே பிரிவுக்கான லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக போர்ச்சுகல் களம் கண்டது. இப்போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே ரொனால்டோ ஒரு கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலையை தேடித் தந்தார். நடுவர்களால் விஏஆர் தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த கோல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இந்த கோலின் மூலம், கால்பந்து வரலாற்றிலேயே 6 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை 41 வயதான ரொனால்டோ தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 ஆகிய ஐந்து உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே தன் வசம் வைத்திருந்தார். தற்போது 2026 உலகக்கோப்பையிலும் கோல் கணக்கை தொடங்கியதன் மூலம், தனது 20 ஆண்டுகால உலகக்கோப்பை பயணத்தில் புதிய சிகரத்தை அவர் எட்டியுள்ளார்.
முன்னதாக, காங்கோ குடியரசுக்கு எதிரான தங்களின் முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி டிரா செய்திருந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரொனால்டோ அடித்த இந்த கோல், போர்ச்சுகல் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.