

ஹைதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி வேகமாக குணமடைந்து வருகிறார் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. ஆனால், காயம் காரணமாக எம்.எஸ்.தோனி இதுவரை சி எஸ்கே அணிக்காக விளையாடவில்லை. இது சென்னை ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது: தோனியின் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற வலைப்பயிற்சியின்போது அவர் பேட்டிங் செய்தார். அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்.
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் வேகமாக குணமடைந்து வருவதை இது காட்டுகிறது. மேலும், ஆடுகளத்தில் அவர் ஓடி பயிற்சி எடுப்பதையும் பார்த்தேன். தனது ஓடும் திறனை மேம்படுத்தும் பணியில் தோனி ஈடுபட்டுள்ளார். இன்னிங்ஸின் இறுதிகட்டத்தில் பேட்டிங் செய்ய நேர்ந்தால், இரண்டு ரன்கள் எடுக்கும் நிலை வரும்போது வேகமாக ஓட வேண்டியிருக்கும்.
அவர் தனது ஓடும் திறனில் நம்பிக்கையைப் பெறவும், அந்த வேகத்தை வளர்த்துக்கொள்ளவும் மட்டுமே இப்போது பயிற்சி பெறுகிறார். அவர் எப்போது அணிக்குத் திரும்பி விளையாடுவார் என்பது எனக்குத் தெரியாது; ஆனால், ரசிகர்களைப் போலவே நானும், அது கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்தார்.