

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி வீரர் தேவ்தத் படிக்கல் தனது 4-வது சதத்தை விளாசினார். இப்போட்டியில் கர்நாடக அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியைத் தோற்கடித்தது.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய கர்நாடக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 108, ஸ்மரண் ரவிச்சந்திரன் 60, கே.எல்.ராகுல் 35, அபிநவ் மனோகர் 79 ரன்கள் குவித்தனர். இந்தத் தொடரில் தேவ்தத் படிக்கல் தனது 4-வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார்.
பின்னர் விளையாடிய திரிபுரா அணி 49 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த அணியின் ஸ்வப்னில் சிங் மட்டும் 100 ரன்களை விளாசினார். இதன்மூலம் இந்தத் தொடரில் தொடர்ந்து 5-வது வெற்றியை கர்நாடக அணி பதிவு செய்துள்ளது.