

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் - தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்க (டிஎன்எஸ்ஜேஏ) விருதுகள் மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா நேற்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதான வளாகத்தில் நடைபெற்றது.
இதில் வளர்ந்து வரும் 10 இளம் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. யு-9 செஸ் வீரர் தமிழ் அமுதன், ஆசிய இளையோர் செஸ் சாம்பியன் ஆர்.ஆரண்யா, மன்னார்குடியை சேர்ந்த 15 வயதான கால்பந்து வீராங்கனை எஸ்.தர்ஷினி, சஷாங்க் சரவணக்குமார் (பாரா சைக்கிளிங்), டி.தரணிதரன் (ஈட்டி எறிதல்), ஷ்ரியா ஆனந்த் (டேபிள் டென்னிஸ்), டி.சவுமியா (வாலிபால்), பி.ஹரிஷ் (அலைச்சறுக்கு), எஸ்.அஸ்ரன்கா, பி.கே. கிஷோர் (கிரிக்கெட்) ஆகியோர் உதவித் தொகையை பெற்றனர்.
நிகழ்ச்சியில் சிஎஸ்கே முழுநேர இயக்குநர் ரூபா குருநாத், சிஇஓ காசி விஸ்வநாதன், யு-19 உலகக்கோப்பையை வென்று தந்த இந்திய கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே வீரருமான ஆயுஷ் மாத்ரே, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வி.பாஸ்கரன், டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல், முன்னாள் வாலிபால் வீரர் எம்.உக்ரபாண்டியன், இந்திய கால்பந்து வீராங்கனை ஆர்.சந்தியா, பிசிசிஐ ஜூனியர் தேர்வுக்குழு தலைவர் சரத், யு-19 இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.செந்தில்நாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டி.ஜே. சீனிவாசராஜ், செயலாளர் யு. பகவன்தாஸ் ராவ், டாக்டர் ஆர்.என்.பாபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.