

ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை: எஞ்சியிருக்கும் போட்டிகளில் நாங்கள் பந்துவீச்சில் இன்னும் மேம்பட வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
சென்னை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வென்றது. தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:
சிஎஸ்கே அணியின் பேட்டிங் இந்தப் போட்டியில் சிறப்பாக இருந்தது. ஆனால் பந்துவீச்சு துறையில் நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். 209 ரன்கள் குவித்தபோதும், பஞ்சாப் அணியின் வெற்றியை எங்களால் தடுக்க முடியவில்லை.
சில ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினோம். ஆனாலும் அதை தொடர்ச்சியாக செய்யமுடியவில்லை. சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. எஞ்சியிருக்கும் போட்டிகளில் நாங்கள் பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்துவோம். பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஒரு கட்டத்தில் ஓவருக்கு 11 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலை இருந்தது. அடுத்த சில ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி அழுத்தம் கொடுத்திருந்தால், பஞ்சாப் அணிக்கு அது நெருக்கடியாக இருந்திருக்கும். இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.