

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனான ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகி உள்ளார். இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது தொடை பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திலிருந்து குணமடைந்து, களம் திரும்ப எப்படியும் 6 முதல் 12 வார காலமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பு சீசனில் இருந்து அவர் விலகி உள்ளார்.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்கு பவர்பிளேவின் கடைசி ஓவர்களில் ரன் சேர்க்க ஆயுஷ் மாத்ரேவின் அதிரடி ஆட்டம் முக்கியமானதாக அமைந்தது. மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, யு19 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்தவர். அவர் தலைமையிலான அணி கடந்த பிப்ரவரி மாதம் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆறு ஆட்டங்களில் 201 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதம் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 177. கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக ஆயுஷ் மாத்ரே, சிஎஸ்கே அணியில் இடம்பிடித்தார். அந்த சீசனில் 7 ஆட்டங்களில் 240 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த சீசனில் அவர் விலகி உள்ளது சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.