

ராஞ்சி: 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இடம் பெறுவார்களா என்பது குறித்து சமீபகாலமாக அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
உடற்தகுதி, மன உறுதி மற்றும் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இவர்கள் இருவரும் அணியில் இடம் பெறுவது தெரிய வரும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா அரை சதம் (57) அடித்த நிலையில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த ஆட்டத்துக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சிதான்ஷு கோடக் கூறியதாவது: இந்திய அணியில் விராட் கோலியின் இடம், அவர் நீண்ட காலத்துக்கு விளையாட முடியுமா என ஏன் விவாதிக்கப்படுகிறது.
ஏன் இதையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவரது எதிர்காலத்தைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? அவர் செயல்படும் விதம், அவரது உடற்தகுதி என எதை பற்றியும் எந்த கேள்வியும் இல்லை.
விராட் கோலி மிகவும் புத்திசாலியான வீரர். அவர் இதேபோன்று பேட்டிங் செய்யும் வரை, வேறு எதை பற்றியும் பேசுவதில் அர்த்தமில்லை. 2027ம் ஆண்டு உலகக் கோப்பையை பற்றி வீரர்களோ, அணி நிர்வாகமோ இதுவரை சிந்திக்கவில்லை. சீனியர் வீரர்கள் குறித்து எந்த விவாதங்களும் நிகழவில்லை. ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அணிக்காக பங்களித்து வருகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சதம் அபாரமானது. பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர், ஏன் இவ்வளவு விதிவிலக்கான வீரர் என்பதை மீண்டும் காட்டினார். ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் பேட்டிங் செய்யும் விதம், அவர்கள் உருவாக்கும் பார்ட்னர்ஷிப்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அணிக்கு பெரிய அளவிலான சாதகமான விஷயம்.
2-வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு அதிகம் இருந்தது. இதனால் பந்து வீச்சாளர்களால் கைகளில் பந்தை இறுக பிடிக்க முடியவில்லை. பந்துகள் நழுவி மட்டைக்கு நேராக சென்றன. தொடக்கத்திலேயே விக்கெட்கள் வீழ்த்திய ஹர்ஷித் ராணாவை பாராட்ட வேண்டும். பந்துகளின் நகர்வுக்கு தகுந்தபடி சரியான திசையில் வீசினார். கூகபுரா பந்துகளில் 2 முதல் 5 ஓவர்கள் வரைதான் ஸ்விங் ஆகும். அதை ஹர்ஷித் ராணா சரியாக பயன்படுத்தினார். இவ்வாறு சிதான்ஷு கோடக் கூறினார்.