

ராஞ்சி: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 574 ரன்கள் குவித்து பிஹார் அணி உலக சாதனை படைத்தது.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பிஹார் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 574 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன்னர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் கடந்த 2022-ம் ஆண்டு இதே அருணாச்சல் பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 506 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது பிஹார் அணி. பிஹார் அணியில் 14 வயதான தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில், 15 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 190 ரன்கள் விளாசினார். அவர், தனது சதத்தை 36 பந்துகளில் விளாசியிருந்தார். மேலும் 150 ரன்களை 59 பந்துகளில் கடந்தார்.
இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 150 ரன்களை விளாசியிருந்த தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி. டி வில்லியர்ஸ் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 64 பந்துகளில் 150 ரன்களை விளாசியிருந்தார்.
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் சகிபுல் கானி 32 பந்துகளில், 12 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் விளாசி மிரட்டினார். அவர், தனது சதத்தை 32 பந்துகளில் விளாசி அசத்தினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சகிபுல் கானி படைத்தார். இதற்கு முன்னர் இதே அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் அன்மோல்பிரீத் சிங் 35 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. மேலும் சகிபுல் கானியின் சதம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக அரங்கில் 3-வது விரைவான சதமாகவும் அமைந்தது.
இந்த வகை சாதனையில் தாஸ்மேனியா அணிக்கு எதிராக ஜேக் பிரேசர் மெக்கர்க் 29 பந்துகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார். 2015-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் விளாசி 2-வது இடத்தில் உள்ளார்.
சகிபுல் கானிக்கு உறுதுணையாக விளையாடிய விக்கெட் கீப்பர் ஆயுஷ் லோஹருகா 56 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் விஜய் ஹசாரே தொடரில் ஒரு இன்னிங்ஸில் 3 சதங்களை விளாசிய முதல் அணி என்ற சாதனையையும் பிஹார் அணி படைத்தது.
அருணாச்சல பிரதேச அணி தரப்பில் மிபோம் மோசு 9 ஓவர்களை வீசி 116 ரன்களை தாரைவார்த்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்தின் பாஸ் டி லீட் 115 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
575 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அருணாச்சல பிரதேச அணி 42.1 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கம்ஷா யங்போ 32, டெக்கி நேரி 28, டெக்கி டோரியா 28 ரன்கள் சேர்த்தனர். பிஹார் அணி சார்பில் ஆகாஷ் ராஜ், சுராஜ் காஷ்யப் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 397 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிஹார் அணி 4 புள்ளிகளை பெற்றது.