

புதுடெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக பயிற்சியாளர் மாற்றப்படப் போகிறார் என்ற செய்தியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) மறுத்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கடந்த ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டார். தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களையும், சரிவையும் சந்தித்து வருகிறது.
கவுதம் கம்பீரின் தலைமையின் கீழ், இந்திய அணி ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைக் குவித்து வருகிறது. அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால், கம்பீரின் வருகைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் சேனா நாடுகளுக்கு (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா) எதிராக இந்திய அணி 10 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
மேலும், இந்த ஆண்டில் சொந்த மண்ணிலேயே நியூஸிலாந்துக்கு எதிராக முழுமையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு எதிராகவும், கம்பீருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அண்மையில் சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-2 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக இழந்தது.
இதனால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீதும், கம்பீர் மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக செய்திகள் வந்தன.
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மனை பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள லஷ்மண் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
கம்பீரின் பதவிக்காலம் வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை உள்ளது. இருப்பினும், எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து பயிற்சியாளர் மாற்றப்படலாம் என்றும் செய்திகள் அடிபடுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 2 போட்டிகள் கொண்ட தொடர்களிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமானாலும் இந்த 9 போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்திய அணி பெறவேண்டும். இதனால் டெஸ்ட் போட்டிக்கு தனி பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார் என்ற செய்திகள் மீண்டும் பலமாக அடிபட்டன. ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்காக தனி பயிற்சியாளரை நியமிக்கப் போவதில்லை என்று பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் மேலும் கூறியதாவது: டெஸ்ட் போட்டிகளுக்காக தனியாக பயிற்சியாளரை நியமிக்கப் போவதாகவும் அதற்காக பிசிசிஐ சார்பில் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மனை அணுகியதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்திகளில் உண்மையில்லை. இவை அடிப்படை ஆதாரமற்றவை. தனி பயிற்சியாளருக்காக பிசிசிஐ யாரையும் அணுகவில்லை. புதிய பயிற்சியாளரை பிசிசிஐ நியமிக்கப்போவதும் இல்லை.
ஊகங்களின் அடிப்படையில் இந்தச் செய்திகள் வெளிவந்துள்ளன. சில நம்பகம் வாய்ந்த செய்தி நிறுவனங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இதில் உண்மையில்லை. இந்தச் செய்திகளை பிசிசிஐ முழுவதும் மறுக்கிறது. இது யாரோ ஒருவரின் கற்பனைச் செய்தியாக இருக்கலாம். அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நீடிப்பார்.இவ்வாறு தேவஜித் சைக்கியா தெரிவித்தார்.