

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் வரும் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் “ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்” விருதை இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பெறவுள்ளார்.
26 வயதான ஷுப்மன் கில், கடந்த வாரம் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் டெஸ்ட், ஒருநாள் போட்டி போட்டிகளில் அவர், மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார்.
ஷுப்மன் டெஸ்ட் அரங்கில் 983 ரன்களைக் குவித்துள்ளார். குறிப்பாக 2025-ல் இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுத் தொடரில் 70-க்கும் அதிகமான சராசரியுடன் 754 ரன்கள் எடுத்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 490 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற தொடரில் எடுத்த 188 ரன்களும் அடங்கும்.
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 49 சராசரியுடன் 1,764 ரன்களை அவர், குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். சர்வதேச டி20 போட்டிகளில் பெரிய தாக்கம் ஏற்படுத்தாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 50 சராசரியுடன் 650 ரன்களை விளாசினார்.
15-ம் தேதி நடைபெறும் விழாவில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக (2024 டி20 உலகக் கோப்பை வெற்றி) கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மும்பை கிரிக்கெட் சங்கம் சிறந்த சங்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.