

டாக்கா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணியிலிருந்து முஸ்டாபிஸுர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஸ்டாபிஸுரை நீக்கவேண்டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இவரை கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கேகேஆர் நிர்வாகம் எடுத்திருந்தது. இதையடுத்து பிசிசிஐ உத்தரவின் பேரில் முஸ்டாபிஸுரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது.
இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வங்கதேச அணி வராது என்றும் தெரிவித்தது.
இதனிடையே, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே பொதுவான மைதானத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. வங்கதேச கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநர்கள் 17 பேர் நேற்று பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் கலீத் மசூத் கூறும்போது, “டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் எங்கள் நாட்டைச் சேர்ந்த முஸ்டாபிஸுருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத போது, எங்களின் ஒட்டுமொத்த அணிக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்? இதன் காரணமாகவே எங்களின் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்' என்றார்.
பிப்ரவரியில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் 3 போட்டிகளிலும், மும்பையில் ஒரு போட்டியிலும் வங்கதேசம் விளையாட இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்பட்டு வரும் நிலையில், வங்கதேசமும் தற்போது அதேகோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.