

அட்லாண்டா: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது அர்ஜெண்டினா. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அபாரமாக ஆடி, தனது அணி கோல் பதிவு செய்ய உதவினார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் வினாடி முதல் கோல் பதிவு செய்ய இரண்டு அணிகளும் முனைப்பு காட்டின. இருப்பினும் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது.
தொடர்ந்து இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்காக கோர்டான், கோல் பதிவு செய்தார். அதன் மூலம் ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து. அதற்கான பதில் கோலை பதிவு செய்யும் முயற்சியில் அர்ஜெண்டினா ஆர்வம் காட்டியது. ஆனாலும் அது அவ்வளவு எளிதில் கைகூடவில்லை.
கம்பேக் கொடுத்த அர்ஜெண்டினா
ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ், அர்ஜெண்டினா அணிக்காக கோல் பதிவு செய்தார். அவர் அடித்த ஷாட் இங்கிலாந்தின் தடுப்பு அரணை வேக வேகமாக தகர்த்து வலைக்குள் சென்றது. அதன் பின்னர் அர்ஜெண்டினா ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
அதற்கடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ஸ்டாப்பேஜ் டைமில் 90+2வது நிமிடத்தில் லாட்ரோ மார்டினஸ் கோல் பதிவு செய்தார். அதன் மூலம் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. அந்த அணி பதிவு செய்த இரண்டு கோலுக்கும் மெஸ்ஸி உதவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தினார்.
வரும் திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு ஸ்பெயின் உடன் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது. உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா அணி 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. 1978, 1986, 2022 ஆகிய தொடர்களில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.