

மியாமி கார்டன்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்ந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் நேற்று அமெரிக்காவின் மியாமி கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, கேப் வெர்டே அணியை எதிர்த்து விளையாடியது.
29-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் வீரர் லிசாண்ட்ரோ மார்டினெஸ் பெனால்டி பாக்ஸை நோக்கி துல்லியமான லாங்-பாஸை அடித்தார். இதை கேப் வெர்டேவின் தற்காப்பு அரணுக்கு பின்னால் மறைந்தபடி சரியான நேரத்தில் ஓடிவந்து பந்தை தன்வசப்படுத்திய லயோனல் மெஸ்ஸி கோல்கீப்பர் வோசின்ஹாவை கடந்து லாவகமாகக் கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
2-வது பாதி ஆட்டத்தில் கேப் வெர்டே பதிலடி கொடுத்தது. வலது பக்கவாட்டில் கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி கேப் வெர்டே அணியின் வீரர் மொரைரா, கேப்டன் மென்டிஸை நோக்கிப் பந்தை நகர்த்தினார். மென்டிஸ் பெனால்டி ஏரியாவுக்குள் இருந்த டெராய் டூர்டேவுக்கு பந்தை கடத்தினார்.
மிட்பீல்டரான டூர்டேவுக்கு கோல் அடிப்பதற்கான ஆங்கிள் கடினமாகவே இருந்தது. ஆனாலும், லிசாண்ட்ரோ மார்டினெஸ் மற்றும் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் ஆகிய இருவரையும் ஏமாற்றி, பந்தை கோல் வலைக்குள் திணித்தார் டெராய் டூர்டே. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 8நிமிடங்களிலும் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 92-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கை அலிஸ்டர் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவர் மீது பட்டு விலகிச் சென்றது. அப்போது அங்கே நின்ற லிசாண்ட்ரோ மார்டினெஸ் சாதுர்யமாக செயல்பட்டு பந்தை கோல் வலையின் டாப் கார்னரில் திணித்தார். இதனால் அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
103-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணி மீண்டும் பதிலடி கொடுத்தது. இடதுபுறத்தில் இருந்து பந்தைக் கடத்திக்கொண்டு உள்ளே நுழைந்த சிட்னி கப்ராக் தனது உடலை லாவகமாகத் திருப்பி அடித்த ‘கர்லிங் ஷாட்’ கோல் வலையின் டாப் கார்னருக்குள் சீறிப் பாய்ந்தது. இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
111-வது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கை பாக்ஸ் பகுதிக்குள் துள்ளியவாறு கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள முயன்றார். அப்போது பந்து கேப் வெர்டே அணியின் வீரர் டினி போர்ஜஸின் கையில் பட்டு கோல் கீப்பர் வோசின்ஹாவை ஏமாற்றி சுய கோலாக மாறியது. இது கேப் வெர்டே ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது.
இந்த கோலால் அர்ஜெண்டினா 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் கேப் வெர்டே அணி போராடிய போதிலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் அர்ஜெண்டினா 3-2 என்ற
கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் அர்ஜெண்டினா வரும் 7-ம் தேதி எகிப்து அணியுடன் மோதுகிறது.
இரும்பு கோட்டையான வோசின்ஹா
அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் கோல் முடிக்கும் முயற்சிகளை 10 முறை தகர்த்தெறிந்தார் கேப் வெர்டேவின் கோல்கீப்பர் வோசின்ஹா. அதிலும் உலகத்தரம் வாய்ந்த வீரரான லயோனல் மெஸ்ஸி அடித்த 5 அபாயகரமான கோல் முயற்சிகளை 40 வயதாகும் வோசின்ஹா தனியாகத் தடுத்து நிறுத்தி அசைக்க முடியாத இரும்புச் சுவராக நின்றார்.
கோல் வேட்டையில் மெஸ்ஸி
அர்ஜெண்டினாவின் கேப்டனான லயோனல் மெஸ்ஸி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 7 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம், இந்த ஆண்டு உலகக் கோப்பையின் அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான ‘கோல்டன் பூட்’ பந்தயத்தில் பிரான்ஸ் நாட்டின் கிலியன் எம்பாப்பேவை விட ஒரு கோல் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளார். மேலும், தனது உலகக் கோப்பை வரலாற்றுச் சாதனையை நீட்டித்துள்ள மெஸ்ஸி, ஒட்டுமொத்த உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 20 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். எம்பாப்பே 18 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பை தொடர்களில் மெஸ்ஸி தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் 12 கோல்களை அடித்து அசத்தி உள்ளார்.
ரசிகர்களின் இதயங்களை வென்ற கேப் வெர்டே
நடப்பு உலகக் கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவுக்கு எதிராக தோல்வி அடைந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள 5.25 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிறிய தீவு நாடான கேப் வெர்டே அசாத்தியமான திறனை வெளிப்படுத்தியது. ஒரு முறை அல்ல, இரு முறை அந்த அணி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது.பெரிய நட்சத்திர வீரர்களோ, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்போ இல்லாத நிலையிலும் கேப் வெர்டே அணி, அர்ஜெண்டினாவை மிரள வைத்த விதம் கால்பந்து உலகம் உள்ளவரை பேசப்படும்.
களத்தில் கேப் வெர்டே அணியின் வீரர்கள் காட்டிய அந்த அசாத்திய துணிச்சல், தோல்வியைத் தழுவினாலும் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் இதயங்களையும் வென்று, தங்களை வரலாற்றில் அழியாத நாயகர்களாக மாற்றியிருக்கிறது.