

ராய்ப்பூர்: அணி வெற்றி பெற்றால் மட்டுமே பேட்ஸ்மேன்கள் குவித்த ரன்களுக்கு மதிப்பு உண்டு என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 359 ரன்கள் இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி 4 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட்கள் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எய்டன் மார்க்ரம் 110 ரன்களும், மேத்யூ ப்ரீட்ஸ்கே 68 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 54 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலையை அடையைச் செய்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நாளை (6-ம் தேதி) விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராய்ப்பூர் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின்னர் எய்டன் மார்க்ரம் கூறியதாவது:
நியாயமாக கூறவேண்டுமெனில், போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பேட்ஸ்மேன்கள் எடுக்கும் ரன்கள் முக்கியத்துவம் பெறும். இந்த போட்டியிலும் நாங்கள் தோல்வி அடைந்திருந்தால் முதல் ஆட்டத்தில் நான் எவ்வளவு துயரப்பட்டிருப்பேனோ அவ்வளவு துயரத்தில் இருந்திருப்பேன். போட்டியில் வெற்றியை பெறுவதே மகிழ்ச்சியை கொடுக்கும்.
முதல் போட்டியில் தொடக்கத்திலேயே 3 விக்கெட்களை இழந்தோம். இது ஆட்டத்தின் முடிவில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியதாக உணர்ந்தேன். தனிப்பட்ட முறையில் அந்த தோல்விக்கு நானே காரணம் என கருதினேன். முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட அதே சூழ்நிலைகளை இந்த ஆட்டத்திலும் எதிர்கொண்டோம். 360 ரன்கள் இலக்கை எப்படி துரத்த வேண்டும் என்பதை அறிவோம். சற்று பொறுப்புடனும் ஆட்டத்தின் இடையில் புத்திசாலித்தனமாகவும் செயல்படவேண்டும்.
டெவால்ட் பிரேவிஸ் பந்தை வெகு தொலைவுக்கு அடிக்கும் திறன் கொண்டவர். அவர், பந்து வீச்சாளர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்குவதற்கு பயப்படாதவர். கிரிக்கெட் பிரியர்களாக, இதைப் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும். அவரது ஆட்டத்தை நிச்சயம் ரசிகர்கள் ரசிப்பார்கள். மேத்யூ ப்ரீட்ஸ்கே தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் அற்புதமான தொடக்கத்தைப் பெற்றுள்ளார்.
ஆட்டத்தின் சூழ்நிலையை அவர், மிகச் சிறப்பாகக் கையாண்டார். அவர் 10 அல்லது 12 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஆனால், ராய்ப்பூரில் அவர் பேட்டிங் செய்த விதம், குறைந்தது 50 ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் போல் இருந்தது. ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய மேத்யூ ப்ரீட்ஸ்கே போன்ற வீரர் அணியில் இருப்பது சாதகமான விஷயம். இவ்வாறு எய்டன் மார்க்ரம் கூறினார்.