

அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா கடந்த 18 மாதங்களாக தனது அதிரடி பேட்டிங்கால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருந்தார். இதனால் உலகக் கோப்பை தொடரில் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அவர், 3 ஆட்டங்களிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருந்தார். நமீபியா அணிக்கு எதிராக காயம் காரணமாக களமிறங்காத நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இன்னும் தனது ரன் கணக்கை தொடங்காமலேயே உள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: அபிஷேக் சர்மா சிறந்த பேட்ஸ்மேன். அவர் மீது உள்ள எதிர்பார்ப்புகள் அதிக சுமையைக் கூட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக அவர் நன்றாக விளையாடி இருந்தால் உலகக் கோப்பை தொடரே வேறு மாதிரியாக இருந்திருக்கும். தற்போது அபிஷேக் சர்மா மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
அவர் களத்தில் நேரத்தை செலவிட வேண்டும். தனது இன்னிங்ஸின் முதல் பந்தில் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்க முயற்சிக்கக் கூடாது. பெரிய ஷாட்டுகள் வந்தால் பரவாயில்லை. ஆனால் அவர், பெரிய ஷாட்களை மேற்கொள்வதற்கு தனக்கு தானே கட்டாயப்படுத்திக் கொள்ளக்கூடாது.
முதலில் ஒரு ரன் எடுக்க வேண்டும். நான்கு பந்துகளில் ரன்கள் எதும் எடுக்கவில்லை என்றாலும் கவலையில்லை. அதை அவர், பின்னர் சரிசெய்து விடுவார். தொடக்கத்தில் அபிஷேக் சர்மா சற்று புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். முதல் ஒரு ஓவர் அல்லது 2 ஓவர்களில் களத்தில் நிலைபெற்ற பின்னர் தனது இயல்பான ஆட்டத்தை விளையாடலாம். முதல் ரன் எடுத்தாலே அனைத்தும் நன்றாக அமையும். இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.