Published : 27 May 2023 04:06 PM
Last Updated : 27 May 2023 04:06 PM

‘இந்தியா மீது தீராக் காதல்’ - குஜராத் பெண்ணை மணந்து இங்கேயே செட்டில் ஆன ஸ்காட்லாந்து வீரர்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உயரமான லெக் ஸ்பின் பவுலர்தான் தாமஸ் ஜோன்ஸ். இவருக்கு இந்திய நாட்டின் மீது தீராக் காதல். குஜராத் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகிவிட்டார் என்று தெரிகிறது. இவர் விரைவில் குஜராத் ரஞ்சி அணியிலும் இடம் பெறுவார் என்று கூறப்படுகின்றது.

குஜராத் டைட்டன்ஸ் நெட் பவுலராக இருந்து வரும் தாமஸ் ஜோன்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரில் குவாலிபையர் 2-க்கு முன்னதாக நெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பந்து வீசினார். இவரது பந்தை ரோஹித் சர்மா தூக்கி அடிக்கப்போய் சரியாக ஆட முடியவில்லை என்று ஊடகச் செய்திகள் வெளியாகின. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு ஓய்வின்றி வீசியபடியே இருந்தார் தாமஸ் ஜோன்ஸ்.

தாமஸ் ஜோன்ஸ் தெற்கு இங்கிலாந்தில் கென்ட்டில் வளர்ந்தார். இங்கு நிறைய அகாடமி கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். பிறகு வாய்ப்புகளுக்காக ஸ்காட்லாந்து சென்றார். யார்க்‌ஷயர், துர்ஹாம் அணிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். குஜராத்திப் பெண் இவர் மீது காதல் கொள்ள, இவருக்கும் இந்தியா மீது காதல் இருக்க குஜராத்திப் பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டார். ஆனால் கோவிட்-19 இவரை கிரிக்கெட்டிலிருந்தும் காதலிலிருந்தும் பிரித்தது. ஆனால், கோவிட் பிரச்னைகள் தீர்ந்த பிறகு காதலியைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்தார். திருமணம் செய்து கொண்டு இங்கேயே கிரிக்கெட் கரியரையும் வடிவமைக்க முடிவு செய்தார்.

தாமஸ் ஜோன்ஸ் ஆங்கில கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “ஸ்காட்லாந்திலிருந்து வந்து அகமதாபாத்தில் வாழ்ந்து, குஜராத்திப் பெண்ணைத் திருமணம் செய்தது பெரிய வேடிக்கைதான். நான் இந்தியாவை பெரிய அளவில் நேசிக்கிறேன். உண்மையில் இங்கு இருக்க பிடித்திருக்கிறது. நான் என் காதலியை ஸ்காட்லாந்தில்தான் சந்தித்தேன். கோவிட் எங்களைப் பிரித்தது. ஓராண்டுக்குப் பிறகு நான் இங்கு வந்து அவரையே திருமணம் செய்து கொண்டேன்” என்றார்.

கிரிக்கெட் கரியரில் ஆஷிஷ் நெஹ்ராவை இவர் சந்தித்தது பெரிய திருப்பு முனை. அந்தச் சந்திப்புதான் குஜராத் டைட்டன்ஸ் நெட் பவுலர் வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது. இங்கு உலகின் தலைசிறந்த நடப்பு லெக் ஸ்பின்னர் ரஷீத் கானுடன் பயிற்சி செய்யும் வாய்ப்பும் தாமஸுக்குக் கிடைத்துள்ளது.

இவர் மைக் ஹஸ்ஸி மற்றும் சிஎஸ்கே அணியின் ரசிகர் என்பது கூடுதல் தகவல். இவர் ரோஹித் சர்மாவுக்கு வீசியுள்ளார், ஷுப்மன் கில்லுக்கு அதிகமாக வீசியுள்ளார். இப்போது இறுதிப் போட்டிக்கு முன்பு சிஎஸ்கே வீரர்களுக்கும் நெட்டில் வீசுவதையும் தோனியைச் சந்திப்பதில் ஆர்வமாகவும் இருக்கிறார் தாமஸ். குஜராத் வாரியத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். அந்த அணியுடன் விரைவில் இணைவார். விரைவில் ரஞ்சி டிராபியிலும் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவை நேசிக்கும் ஒரு ஸ்காட்லாந்து வீரர் கடைசியில் இந்தியாவுக்காக ஆடும் வாய்ப்பு கிடைப்பதை எதிர் நோக்குகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x