

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் 3 முறை 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து வென்ற ஒரே அணி என்ற புதிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி 199 ரன்களை குவித்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என மரண அடி அடித்து 83 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதையடுத்து 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மும்பை வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் 3 முறை 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து வென்ற ஒரே அணி என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ். முன்னதாக 2014-ல் பஞ்சாப் கிங்ஸ் 2 முறையும், 2018 தொடரில் சென்னை அணி இரண்டு முறை 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து வெற்றிப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.