Published : 05 Apr 2023 06:42 AM
Last Updated : 05 Apr 2023 06:42 AM

ஊக்க மருந்து விவகாரத்தில் சஞ்ஜிதா சானுவுக்கு 4 ஆண்டுகள் தடை

சஞ்ஜிதா சானு | கோப்புப்படம்

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு பளு தூக்குதலில் இரு முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான சஞ்ஜிதா சானு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் அவருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது.

குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பளு தூக்குதல் வீராங்கனையான சஞ்ஜிதா சானுவிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை சோதனை நடத்தியது. இதில் அவர், தடை செய்யப்பட்ட ட்ரோஸ்டனோலோன் மெட்டாபொலிட் என்ற மருந்தை எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து விதமான போட்டிகளிலும் 4 ஆண்டுகளுக்கு சஞ்ஜிதா சானு பங்கேற்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை.

இதை இந்திய பளுதூக்குதல் சங்கத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவும் உறுதி செய்துள்ளார். தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் தடையால் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை சஞ்ஜிதா சானு இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 48 கிலோ எடை பிரிவிலும், 2018ம் ஆண்டு கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 53 கிலோ எடைப் பிரிவிலும் சஞ்ஜிதா சானு தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

சஞ்ஜிதா சானு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்குவது இது புதிதல்ல. மணிப்பூரைச் சேர்ந்த அவர்,கடந்த 2018ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற போது ஊக்க மருந்து விவகாரத்தால் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் தடையை எதிர்கொண்டார். 2020ம் ஆண்டும் இதே பிரச்சினையில் சிக்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x