

சிட்னி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விழித்தெழ வேண்டிய நேரம் இது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் அட்டவணையை விமர்சிக்கும் வகையில் அவர் இதனை சொல்லியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன.
எதிர்வரும் ஜூன் 7 - 11-ம் தேதிகளில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. டைட்டானிக் படத்தில் நாயகன் கடைசி நேரத்தில் கப்பலுக்கான டிக்கெட்டை பெறுவதை போல கடைசி நேரத்தில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான நியூஸிலாந்து அணியின் வெற்றி இரண்டாவது முறையாக இந்தியாவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
“சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விழித்தெழ வேண்டிய நேரம் இது. நீங்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் பிரதான லீக் போட்டிகள் 2021 ஆகஸ்ட் முதல் 2023 மார்ச் வரைதான் நடைபெறுகிறது. பிறகு ஏன் இறுதிப் போட்டிக்கு மூன்று மாத கால காத்திருப்பு ஏன்? இதற்கான சுவாரஸ்யம், எதிர்பார்ப்பு என அனைத்தும் குறைந்து விடும். இடைப்பட்ட நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெற உள்ளது.
அதனால் ரசிகர்கள் மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆர்வம் மங்கிவிடும். மேலும், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் பொதுவான மைதானங்களில் நடத்தப்படக் கூடாது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியின் சொந்த மண்ணில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.