ஜெஸ்வின் ஆல்ட்ரின்
ஜெஸ்வின் ஆல்ட்ரின்

நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் புதிய தேசிய சாதனை!

Published on

பெல்லாரி: 2-வது இந்தியன் ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில் நீளம் தாண்டுதலில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின். 8.42 மீட்டர் நீளம் தாண்டி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முந்தைய தேசிய சாதனையை காட்டிலும் இது 0.6 மீட்டர் இது அதிகம்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது மூன்றாவது முயற்சியில் அவர் இந்தச் சாதனையை படைத்திருந்தார். இதன்மூலம் எம்.ஸ்ரீசங்கர் வசம் இருந்த தேசிய சாதனையை அவர் தகர்த்தார். “தேசிய சாதனையை இங்கு படைத்ததில் பெருமை கொள்கிறேன். ஏனெனில், இங்குதான் கடந்த சில ஆண்டுகளாக நான் பயிற்சி செய்து வருகிறேன். கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது. இதே போன்ற செயல்பாட்டை உலக அளவிலான போட்டிகளில் வெளிப்படுத்த விரும்புகிறேன்” என ஜெஸ்வின் தெரிவித்துள்ளார்.

21 வயதான அவர் தமிழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்தவர். இந்தப் போட்டியில் ட்ரிபிள் ஜம்பில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் முதலிடம் பிடித்தார். உயரம் தாண்டுதல் மகளிர் பிரிவில் தமிழகத்தின் நிரஞ்சனா சம்பத் மூன்றாம் இடம்பிடித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in