

கிரிக்கெட் களத்தில் வீரர்கள் தங்கள் விக்கெட்டை ரன் அவுட் மூலம் இழப்பது வழக்கமான ஒன்றுதான். எந்தவொரு வீரரும் தான் அவுட்டாக வேண்டும் என விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் விக்கெட்டை இழப்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதில் ரன் அவுட்டும் அடங்கும். இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த ரன் அவுட்டால் மூன்று முறை நாக்அவுட் சுற்றில் உலகக் கோப்பை கனவு கலைந்துள்ளது.
அதன்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சமும் சுக்கு நூறாக நொறுங்கி உள்ளன. பெரும்பாலும் இந்த ரன் அவுட்கள் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத வடுவாகவே உருமாறி நிற்கும்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 அரையிறுதி: ஹர்மன்பிரீத் கவுர்
நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 52 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தார் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத். அவர் களத்தில் செட் ஆகி இருந்த நிலையில் விக்கெட்டை இழந்திருந்தார். அவர் நேற்றைய போட்டியில் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 அரையிறுதி: தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் அபார பேட்ஸ்மேன்களில் ஒருவர் தோனி. கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 50 ரன்கள் எடுத்த நிலையில் தோனி ரன் அவுட் ஆனார். அன்றைய போட்டியில் ஜடேஜாவுடன் அபார கூட்டணி அமைத்தார். இருந்தும் தோனியின் ரன் அவுட் காரணமாக இந்தியா ஆட்டத்தையும் இழந்தது. அதுவே தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டியாகவும் அமைந்தது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2003 இறுதிப் போட்டி: சேவாக்
2003 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. 59 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. இருந்தபோதும் திராவிட் உடன் அபார கூட்டணி அமைத்தார் சேவாக். 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் ரன் அவுட் ஆனார். இந்திய அணியின் இந்த மூன்று ரன் அவுட்டும் இலக்கை விரட்டியபோது நடந்தது.