துப்பாக்கி சுடுதலில் ஜிது ராய் ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதலில் ஜிது ராய் ஏமாற்றம்
Updated on
1 min read

ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் இறுதி சுற்றுக்கு முன்னேற தவறினார்.

தகுதி சுற்றில் ஜிது ராய் 581 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தை பிடித்தார். ஆனால் முதல் 8 இடத்தை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். துருக்கியை சேர்ந்த டக்ருல் ஓஸர் 582 புள்ளிகள் பெற்று கடைசி வீரராக இறுதி சுற்றில் நுழைந் தார்.

மற்ற இந்திய வீரர்களான பிரகாஷ் நஞ்சப்பா 34-வது இடத்தையும், அனமோல் ஜெயின் 36-வது இடத்தையும் பிடித்தனர். இந்த பிரிவில் 19 வயதான உக்ரைனை சேர்ந்த பாவ்லோ கொரோஸ்டிலோவ் தங்கப் பதக்கம் வென்றார்.

உலகக் கோப்பையில் முதன் முறையாக பங்கேற்ற அவர் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். ஜப்பானை சேர்ந்த டோமொயோக்கி மட்சுடா வெள்ளிப் பதக்கமும், கொரியாவின் ஜோகோங் ஜின் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான ரைபிள் 3 பொஷிசன் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் தேஜஸ்வினி 584 புள்ளிகள் பெற்று 15-வது இடத்தையே பெற்றார். இந்த பிரிவின் இறுதிப் போட்டியில் குரோஷியாவின் ஸ்னேஜ்சனா பீஜிக் தங்கப் பதக்கமும், ஜெர்மனி வீராங்கனைகளான செலினா வெள்ளிப் பதக்கமும், ஜாலின் பீர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in