

சென்னை: நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது. அணியின் இந்த தோல்விக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட் விலகி உள்ளார். உலகக் கோப்பை தொடர் நேற்று முடிந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனலிட்டிக்கல் பயிற்சியாளர் கிரெக் கிளார்க் மற்றும் ஆலோசகர் மிட்செல் டேவிட் பெம்பர்டன் ஆகியோரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளனர். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற இந்த தொடரில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
குரூப் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியான கிராஸ்ஓவர் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. கிரஹாம் ரீட்: இந்திய அணியுடனான டைம்லைன்
“எனது பொறுப்பை அடுத்து வரும் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என கருதுகிறேன். இந்திய அணி மற்றும் ஹாக்கி இந்தியாவுடனான இணைந்து பணியாற்றியதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்வுடன் அனுபவித்தேன். அணிக்கு எனது வாழ்த்துகள்” என ரீட் தெரிவித்துள்ளார்.