Published : 05 Jan 2023 03:33 AM
Last Updated : 05 Jan 2023 03:33 AM

அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ

ரியாத்: போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்முறை கால்பந்து வீரராக ஐரோப்பிய அணிகளில் இணையாமல், மத்திய கிழக்கு நாட்டின் கிளப் அணியில் ரொனால்டோ இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆச்சர்யத்தை போக்கும் வகையில், அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அல் நசர் கிளப்பில் இணைந்த ரொனால்டோ இதுதொடர்பாக பேசுகையில், "நான் ஒரு தனித்துவமான வீரர். இங்கு வந்துள்ளதை நல்லது என கருதுகிறேன். ஐரோப்பாவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளேன். மேலும் சில சாதனைகளை இங்கு முறியடிக்க விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, வெற்றிபெறவும், விளையாட்டை ரசிக்கவும், சவுதி நாட்டின் கலாச்சாரத்தின் வெற்றியின் ஒரு பகுதியாக இருக்கவே இங்கு இணைத்துள்ளேன். ஐரோப்பா அணிகளில் இணைய எனக்கு நிறைய சலுகைகள் வந்தன. பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போர்ச்சுகலில் இருந்து கூட ஆபர்கள் வந்தன. பல கிளப்கள் என்னை ஒப்பந்தம் செய்ய முயற்சித்தன, ஆனால் நான் இந்த கிளப்பில் இணைவதற்கான வாக்குறுதியை கொடுத்தேன். காரணம் கால்பந்து மட்டுமல்ல, இந்த அற்புதமான நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு இது" என்று பேசியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ கடைசியாக இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டெடு கிளப்பில் விளையாடி வந்தார். அணி நிர்வாகம், பயிற்சியாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கிளப்பில் இருந்து விலகியிருந்தார். 5-வது முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரொனால்டோ பங்கேற்ற போதிலும் அணிக்காக கோப்பையை வென்று கொடுக்க முடியாமல் போனது. இம்முறை அவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றிலும், கால் இறுதி ஆட்டத்திலும் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார். இதனால் அவர், கடும் அதிருப்தியில் இருந்தார். இதே நிலைதான் அவருக்கு மான்செஸ்டர் அணியிலும் இருந்தது.

ஐரோப்பிய லீக் போட்டிகளில் வெகுகாலம் ஆதிக்கம் செலுத்திய ரொனால்டா தற்போது முதன்முறையாக ஆசிய கிளப்பில் இணைந்துள்ளார். 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைட்டெடு அணியிலும் 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை ரியல்மாட்ரீட் அணியிலும் 2018 முதல்2021 வரை ஜுவென்டஸ் அணியிலும் விளையாடியிருந்தார் ரொனால்டா. இதன் பின்னர் 2021-ம்ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைட்டெடு அணிக்கு திரும்பினார். ஆனால் அங்கு ஏற்பட்ட மனக்சப்பு காரணமாக வெளியேறி தற்போது அல் நசர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரொனால்டோ நீண்ட காலமாகவே கால்பந்து உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மான்செஸ்டர் அணியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து செல்சியா, பேயர்ன் முனிச், நபோலி அணிகளுடன் ரொனால்டோ தொடர்பில் இருந்தார். இதனால் இந்த அணிகளில் ஏதேனும் ஒன்றில் அவர், இணையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும் தொகைக்கு சவுதி அரேபியாவின் அல் நசர் கிளப்பில் தற்போது இணைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x