அர்ஜெண்டினா வெற்றி பெற்றதால் இலவசமாக தேநீர் வழங்கிய கொல்கத்தா பெண்

அர்ஜெண்டினா வெற்றி பெற்றதால் இலவசமாக தேநீர் வழங்கிய கொல்கத்தா பெண்
Updated on
1 min read

கொல்கத்தா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கொல்கத்தாவில் தேநீர்கடை நடத்தி வரும் பெண் ஒருவர், ரசிகர்களுக்கு இலவசமாக தேநீர்வழங்கி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அர்ஜெண்டினா – பிரான்ஸ் அணிகள் மோதிய இந்தஇறுதி ஆட்டம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு நொடியும் உற்சாகத்தை கொடுத்தது. சுமார்மூன்று மணிநேரம் நீடித்த பரபரப்பான ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட்அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையில் பட்டத்தை வென்றதால், உலகெங்கிலும் உள்ள மெஸ்ஸியின் ரசிகர்கள் வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். உலகக் கோப்பை தொடர் முழுவதும் கொல்கத்தாவில் கால்பந்து ஜூரம் எல்லா நேரத்திலும் உச்சத்தில் இருந்தது. அர்ஜெண்டினாவின் வெற்றியை கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் சொந்த வழியில் கொண்டாடி வருகின்றனர். இந்த வகையில் தேநீர் கடை நடத்திவரும் பெண் ஒருவர், கால்பந்து ரசிகர்கள் அனைவருக்கும் இலவச தேநீர் கொடுத்துள்ளார்.இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு கடை உரிமையாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in