

அல் ரய்யான்: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை குரூப் சுற்று போட்டியில் செனகல் மற்றும் ஈக்வேடார் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஈக்வேடார் அணிக்கு இருந்தது. ஆனால் அதனை தடுத்து தவிடு பொடியாக்கியது செனகல் அணி.
குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை செய்தன. முதல் பாதியின் கடைசி நொடிகளில் ஒரு கோல் பதிவு செய்து அசத்தியது செனகல் அணி.
அதற்கான பதில் கோலை 67-வது நிமிடத்தில் பதிவு செய்தது ஈக்வேடார். ஆனாலும் அடுத்த 3 நிமிடங்களில் இரண்டாவது கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது செனகல். ஆட்ட நேர முடிவில் 2-1 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது அந்த அணி. இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்தது செனகல்.
இதே பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது நெதர்லாந்து அணி. பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் ஆகிய அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.