T20 WC | “நான் நிம்மதியாக தூங்குவேன்” - அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல்

T20 WC | “நான் நிம்மதியாக தூங்குவேன்” - அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல்

Published on

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளில் அவர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தார். அதன் காரணமாக அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் 31 பந்துகளில் அவர் அரை சதம் பதிவு செய்திருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முன்னர் இதே தொடரில் நடைபெற்ற 3 போட்டிகளில் முறையே 4, 9, 9 என ஒற்றை இலக்கங்களில் ரன் எடுத்திருந்தார்.

அதனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. மாற்று வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ராகுலுக்கு மாற்றாக ரிஷப் பந்த் என்றெல்லாம் சொல்லப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர், ‘அவருக்கு அவர் மீதே நம்பிக்கை இல்லை’ என விமர்சித்திருந்தார்.

ஆனால் வங்கதேசத்திற்கு எதிராக ராகுல் ஆடிய விதம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் சில பந்துகளில் ரன் சேர்க்காமல் ஆடுகளத்தை ரீட் செய்த அவர், அடுத்த சில பந்துகளில் வேகத்தை கூட்டினார். இருந்தும் அரை சதம் விளாசிய அடுத்த பந்தே அவர் அவுட்டானார். எனினும் கம்பேக் கொடுத்தது பலரின் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

போட்டிக்குப்பின் பேசிய கேஎல் ராகுல், "அணிக்கு தேவையானதை செய்ய முடிந்தால், நான் நிம்மதியாக தூங்குவேன். இது எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி. மொத்த வீரர்களும் இதில் பங்களிக்க விரும்பினோம்" என்று பேசியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in