IND vs SA | தென்னாப்பிரிக்காவை ஆட்டம் காண செய்த அரஷ்தீப், தீபக் சஹார்: இந்தியாவுக்கு 107 ரன்கள் இலக்கு

இந்திய அணி வீரர்கள்.
இந்திய அணி வீரர்கள்.
Updated on
1 min read

திருவனந்தபுரம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 106 ரன்களை எடுத்துள்ளது. அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சஹார் அபாரமாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட் செய்திருந்தனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. தென்னாப்பிரிக்க அணி பவர்பிளே ஓவர்களின் முதல் மூன்று ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. டெம்பா பவுமா, டிகாக், ரிலே ரோஸ்சோவ், டேவிட் மில்லர், ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் வரிசையாக 10 பந்துகளில் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர். ஒரே ஓவரில் அர்ஷ்தீப் சிங், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் டிகாக்கை தவிர மற்ற அனைவரும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.

பவர்பிளே ஓவர்களின் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. 7 முதல் 15 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே அந்த அணி இழந்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி.

அதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா. அதிகபட்சமாக கேஷவ் மகாராஜ் 41 ரன்களும், மார்க்ரம் 25 ரன்களும், பார்னெல் 24 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகள், தீபக் சஹார் 2 விக்கெட்டுகள், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகள் மற்றும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். இந்திய அணிக்கு இறுதி ஓவர்கள் மீண்டும் தலைவலியாகவே அமைந்துள்ளது. தற்போது இந்திய அணி 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in