

ஹராரே: மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வெல்ல வேண்டும் என இறுதி வரை போராடியது ஜிம்பாப்வே அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன் சிக்கந்தர் ரஸா சதம் விளாசி இருந்தார். இருப்பினும் வெற்றிக் கோட்டை நெருங்கிய அந்த அணியால் அதனை கடக்க முடியவில்லை. அதனால் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று (ஆகஸ்ட் 22) ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 289 ரன்கள் எடுத்தது. 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது ஜிம்பாப்வே. 6 ரன்கள் எடுத்து அவுட்டானார் இன்னசென்ட் கயா.
இருப்பினும் சியன் வில்லியம்ஸ் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்தார். Kaitano உடன் 34 ரன்கள் மற்றும் முன்யோங்கா உடன் 41 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர். இருந்தாலும் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவர் விட்டு சென்ற பணியை அடுத்ததாக பேட் செய்ய வந்த சிக்கந்தர் ரஸா கவனித்துக் கொண்டார். ஒரு பக்கம் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை இழந்தது. அப்போது எட்டாவது விக்கெட்டிற்கு பிராட் எவன்ஸ் உடன் இணைந்து 104 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரஸா.
88 பந்துகளில் சதம் விளாசினார் அவர். அப்போது எவன்ஸ், 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து 115 ரன்கள் எடுத்து ரஸா அவுட்டானார். 49.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி வென்றுள்ளது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் களம் இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தனர். ராகுல், 30 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து தவானும் 40 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கில் மற்றும் இஷான் கிஷன் இணைந்து 140 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணிக்கு அது மிகவும் முக்கியமான பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. கிஷன், 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹூடாவும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதி ஓவரின் முதல் பந்து வரை அவர் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 97 பந்துகளில் 130 ரன்கள் குவித்திருந்தார். இதில் 15 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.
சஞ்சு சாம்சன், அக்சர் படேல், தாக்கூர் போன்ற வீரர்கள் மிக விரைவில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்தது.
ஜிம்பாப்வே அணிக்காக பிராட் எவன்ஸ் சிறப்பாக பந்து வீசி இருந்தார். 10 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அவர்.