

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பிந்த்யாராணி தேவி சொரோகைபம் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளார். ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியிலேயே 81 கிலோ எடையை தூக்கிய பிந்த்யாராணி தேவி, இரண்டாம் முயற்சியில் 84 கிலோ எடையையும் இறுதி முயற்சியில் 86 கிலோ எடையை தூக்கி அசத்தினார். க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியில் 110 கிலோ எடையை தூக்கியவர், இரண்டாம் முயற்சியில் 114 கிலோ எடையை தூங்குவதில் தோல்வி கண்டார். என்றாலும் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
முன்னதாக, ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில்இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அடுத்தபடியாக 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியுள்ளது பாராட்டுகளை பெற்றுவருகிறது.