செஸ் ஒலிம்பியாட் மாணவர்களுக்கு பாராட்டு

செஸ் ஒலிம்பியாட் மாணவர்களுக்கு பாராட்டு
Updated on
2 min read

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் 115, நிக்கோலஸ் பூரன் 74 ரன்கள் எடுத்தனர். 312 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 40 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 100 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அக்சர் படேல் 35 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாச இந்திய அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக ஷிகர் தவண் 13, ஷுப்மன் கில் 43, ஸ்ரேயஸ் ஐயர் 63, சூர்யகுமார் யாதவ் 9, சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

செஸ் ஒலிம்பியாட் மாணவர்களுக்கு பாராட்டு

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிகளில் வேலம்மாள் பள்ளி மாணவர்களான அதிபன் பாஸ்கரன், எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன் முரளி, வைஷாலி, பிரக்யானந்தா, குகேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் பயிற்சியாளராக உள்ள நாராயணன் ஸ்ரீநாத், ஷியாம் சுந்தர், பிரியதர்ஷன் ஆகிய 3 பேரும் வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். இந்நிலையில் இவர்களுக்கு சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நேற்று வேலம்மாள் குழுமத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வேலம்மாள் மாணவர்களுக்கு ரூ.30 லட்சும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல் மோகன், காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வெல்லும் வேலம்மாள் பள்ளி மாணவருக்கு ரூ.50 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.35 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மனரீதியிலான துன்புறுத்தல் லோவ்லினா குற்றச்சாட்டு

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை அணியினர் நேற்று முன்தினம் அயர்லாந்தில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு காமன்வெல்த் விளையாட்டு கிராமத்துக்கு திரும்பினர். அப்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான லோவ்லினா போர்கோஹைனின் தனிப்பட்ட பயிற்சியாளரான சந்தியா குருங்கிற்கு அங்கீகார அட்டை இல்லாததால் கிராமத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் லோவ்லினா தனது ட்விட்டர் பதிவில், “ஒலிம்பிக்கில் நான் பதக்கம் வெல்ல உதவிய என்னுடைய பயிற்சியாளர்கள் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படுகிறார்கள். இது என்னுடைய பயிற்சியை பாதிக்கிறது. இதனால் நான் மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறேன். காமன்வெல்த் கிராமத்தில் இருந்து என்னுடைய பயிற்சியாளர் சந்தியா வெளியேற்றப்பட்டுள்ளார். இன்னொரு பயிற்சியாளரும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in