

யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு இந்திய வீரரான ரோஹித் யாதவும் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். தகுதி சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த அவர், 80.42 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடம் பிடித்தார். தகுதி சுற்றில் ஓட்டுமொத்தமாக ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். நீரஜ் சோப்ரா 2-வது இடத்தையும் ரோஹித் யாதவ் 11-வது இடத்தையும் பிடித்தனர். இறுதி சுற்று இந்திய நேரப்படி நாளை காலை 7.05 மணிக்கு நடைபெறுகிறது.