நார்வே செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த்

நார்வே செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த்
Updated on
1 min read

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் பிரிவில் 5-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் தனது 5-வது சுற்றில் நேற்று உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட ‘சடன் டெத்’ ஆட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் 50-வது நகர்த்தலின் போது கார்ல்சனை வீழ்த்தினார்.

இந்தத் தொடரில் ஏற்கெனவே பிளிட்ஸ் பிரிவிலும் கார்ல்சனை தோற்கடித்திருந்தார் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த். தற்போதைய வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் இன்னும் 4 சுற்றுகள் உள்ளன. கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறார். அமெரிக்காவின் வெஸ்லி சோ, அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேதியரோவ் ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in