Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடர் | இறுதி போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா.
பிரக்ஞானந்தா.
Updated on
1 min read

சென்னை: Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடரில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இணைய வழியில் நடைபெறும் இந்த தொடரில் 16 வயதான பிரக்ஞானந்தா அசத்தலாக விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் சதுரங்க விளையாட்டின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார். காலிறுதியில் சீனாவின் Wei Yi வீழ்த்தினார். அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் முறையில் வீழ்த்தினார். அதன் பலனாக அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இறுதி ஆட்டத்தில் அவர் உலகின் நம்பர் 2 வீரரான சீனாவின் Ding Liren-னை எதிர்கொள்கிறார். இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகும். அரையிறுதி ஆட்டம் பின்னிரவு நேரம் வரை நீண்டது. அதில் வெற்றி பெற்ற நிலையில் இன்று காலையில் நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொண்டுள்ளார் பிரக்ஞானந்தா. அதே நேரத்தில் இறுதிப் போட்டியில் வெல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சதுரங்க உலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார் பிரக்ஞானந்தா. மிக இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் அவர் வென்று அசத்தியுள்ளார். கடந்த 2013-ல் உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். கடந்த ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்யவிக் ஓபன் சதுரங்க போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தார் பிரக்ஞானந்தா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in