Published : 14 May 2022 06:47 AM
Last Updated : 14 May 2022 06:47 AM

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதல் வேகங்களுடன் வலுவாக திரும்பி வருவோம் - சிஎஸ்கே கேப்டன் தோனி உறுதி

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. 98 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 31 பந்துகளை மீதம் வைத்து எளிதாக வெற்றிபெற்றது.

போட்டி முடிவடைந்ததும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறியதாவது:

வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித்சிங் ஆகியோர் சிறப்பாக வீசியது நேர்மறையான விஷயம். அடுத்த சீசனில் கூடுலாக இரு வேகப்பந்து வீச்சாளர்கள் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக அவர்களுக்கு போதுமான நேரத்தை வழங்க விரும்புகிறோம்.

எங்களிடம் சில நேர்மறையான அம்சங்கள் உள்ளன, அதை அடுத்த சீசனுக்கு எடுத்துச் செல்வோம். எந்த இடைவெளிகள் இருந்தாலும், கசிவுகள் நடக்காதபடி அந்த இடைவெளிகளை நிரப்ப முயற்சிக்க வேண்டும். பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்களின் எழுச்சியை ஐபிஎல் தொடரில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள் அசாதாரண திறனுடன் இல்லாத ஒரு காலக்கட்டத்தை நாம் கடந்துவிட்டோம். வேகப்பந்து வீச்சாளர்கள் முதிர்ச்சியடைய காலம் எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் அல்லது டி20 எனஅனைத்து விதமான வடிவங்களிலும் ஆறு மாதங்களில் இடம்பெறக்கூடிய ஒருவரை நீங்கள் பெறுவீர்கள்.

ஐபிஎல் இதைத்தான் செய்கிறது என்று உணர்கிறேன். எந்தவித ஆடுகளமாக இருந்தாலும் 130 ரன்களுக்கு கீழ் எடுத்தால் வெற்றி பெறுவது கடினம். அழுத்தமான சூழ்நிலையில் பேட்டிங் செய்யும் போது முதலில் எதிர்கொள்ளும் சில பந்துகள் முக்கியமானது. களத்தில் நின்ற வீரர்களிடம் நீங்கள், நீங்களாகவே விளையாடுங்கள் என்றே கூறினேன். முதல் பந்திலேயே அடித்து விளையாட விரும்பினால் அவ்வாறே செய்யலாம். முதலில் எதிர்கொள்ளும் சில பந்துகளை கடந்துவிட்டால், அவர்கள், அவர்களாகவே இருக்கலாம்.

ஆனால் அது கைகொடுக்கவில்லை. அதேவேளையில் மும்பை அணி சிறப்பாக பந்து வீசியது. எங்கள் தரப்பில் இருந்து சரியான அணுகுமுறை தேவையாக இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்களில் சிலர் சிறந்த பந்துகளில் ஆட்டமிழந்திருந்தனர். இதுபோன்ற ஆட்டங்களில் அதிகம் கற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு எம்எஸ் தோனி கூறினார்.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா – ஹைதராபாத்

நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x